பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு; 13 அதிகாரிகள் மீது நடவடிக்கை
1 min read
Malpractice in Prime Minister’s Housing Scheme; Action against 13 officials
17.8.2024
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி கங்காதரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குனர் ஈஸ்வரன் தலைமையில் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட 13 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அரசு விரைவில் உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.