அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் புதிய கட்டிடம் – ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
1 min read
Rajnath Singh inaugurated the new building at Adyar Coast Guard Complex
18.8.2024
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்னினார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் வகையில், 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த நிலையில் சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மைய கட்டடத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சென்னை துறைமுக மண்டல கடல் மாசு நிவாரண மையம், புதுச்சேரி கடலோர காவல்படை விமான வளாகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.