பாம்பன் புதிய பாலத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
1 min read
Test run of train running on Pampan new bridge
21.8.2024
ராமேஸ்வரம் பாம்பன் கடலில் ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் இறுதி கட்டப் பணியாக மையப் பகுதியில் உள்ள தூக்கு பாலத்தை முழுமையாக திறந்து மூடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் முதல் முறையாக 11 பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தின்போது 20 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.
சரக்கு ரெயில் என்ஜின் செங்குத்து தூக்கு பாலத்தை கடந்து சென்றதால் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. ரெயில் சோதனை நடைபெற்றபோது பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து புதிய ரெயில் பாலம் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விரைவில் பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வழியாக கடந்த 5-ம் தேதி ரெயில் எஞ்சினை இயக்கி ரெயில்வே துறையினர் சோதனை மேற்கொண்டனர்.