உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா உறுதுணையாக இருக்கும்- ஜெலின்ஸ்கிக்கு மோடி உறுதி
1 min read
India will help end Ukraine war- Modi assures Zelinsky
24.8.2024
போலந்து நாட்டுக்கு 2 நாள் பயணமாகச் சென்ற மோடி அங்கிருந்து சொகுசு ரெயில் மூலம் 7 மணிநேரம் பயணித்து நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். தலைநகர் கீவ்-வில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைன் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது, இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், பொருளாதார பிரச்சனைகள், பாதுகாப்பு, மருந்துகள், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் ஒத்துழைப்பு, மருத்துவ உற்பத்தி பொருட்கள் ஒழுங்கமைப்பு துறையில் ஒத்துழைப்பு, உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவியை இந்தியா வழங்குதல் மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுதவிர்த்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று ஜெலின்ஸ்கிக்கு மோடி உறுதியளித்தார். மேலும் ஜெலின்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அமரிக்கா சொல்வது என்ன?
இந்நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்காவும் தனது கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யான் கிர்பி கூறியுள்ளதாவது:-
மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷிய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தியா செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.