லெபனானில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்; பதிலுக்கு ஹிஸ்புல்லா 320 ராக்கெட்டுகளை ஏவியது
1 min read
Israel’s surprise attack in Lebanon; Hezbollah fired 320 rockets in response
25.8.2024
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கடந்த 30 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் எந்த நேரமும் போர் மூளலாம் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் லெபனான் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவினர் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் ஏவுகணைகளை வீசி அடிக் கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் [தற்காப்பு] தாக்குதல்
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலைக் குறி வைத்து பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அதனால் தற்காப்புக்காக தங்கள் தரப்பிலிருந்து இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக இஸ்ரேல் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள லெபனான் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலால் லெபனானில் பெரும் பதற்றம் நிலவியது. மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இத் தாக்குதலால் லெபனானில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
லெபனான் மீதான தாக்குதலையடுத்து இன்று அதிகாலை, ஹிஸ்புல்லா இயக்கத்தினர் வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்தன.
இதையடுத்து இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் உஷார்ப்படுத்தப்பட்டனர். குறிப்பாக லெபனான் எல்லையை ஒட்டி உள்ள வடக்கு இஸ்ரேல் பகுதியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இஸ்ரேலில் நேற்று அதிகாலை 6 மணி முதல் அடுத்த 48 மணிநேரத்துக்கு அவரச நிலை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில் இதுகுறித்து ஹிஸ்புல்லா இயக்கம் கூறும்போது, இஸ்ரேலின் ராணுவ தளங்களைக் குறிவைத்து, இஸ்ரேலுக்குள் ஏவுகணை, டிரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. மெரோன் தளம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் உள்ள 4 தளங்கள் உள்பட 11 இஸ்ரேல் ராணுவ தளங்கள், முகாம்கள் மீது 320-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
இஸ்ரேலுக்கு எதிரான எங்களது பதிலடித் தாக்குதலின் முதல் கட்டம் முழு வெற்றியுடன் முடிவடைந்தது. ஹிஸ்புல்லா தளபதி புவாட் ஷுக்ரைக் கொன்றதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காசா போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இஸ்ரேல்-லெபனான் இடையேயான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.