டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதலால் ரஷியாவின் 38 மாடி குடியிருப்பு தீப்பற்றி எரிகிறது
1 min read
38-story Russian building goes up in flames after Ukraine drone strike
26.8.2024
ரஷியா உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளும் மேலாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷிய பகுதிகளுக்குள் நுழைந்தது தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் கூர்க்ஸ் உள்ளிட்ட பிராந்தியங்களை உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதனால் ரஷிய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதலுடன் பதிலடி கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை, 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்களை தங்களின் ராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது. இந்த சம்பத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவின் சராதோவ் பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் 20 டிரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் வானிலேயே தகர்க்கப்பட்ட டிரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. இதில் பெண் ஒருவர் படுகாயடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் சராதோவ் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சராதோவ் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தடைபட்டுள்ளன.