பண்பொழி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்
1 min read
A wild elephant attacked one person near Panbozhi
27.8.2024
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு ஊருக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை மிதித்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரை கடையநல்லூர் எம்.எல்.ஏ செ.கிருஷ்ணமுரளி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் உலா வரும் ஒற்றை யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு வந்த ஒற்றை காட்டு யானையானது திரும்ப செல்லாமல் தற்போது அதே பகுதியில் சுற்றி வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டும் அந்த முயற்சி பலன் அளிக்காமல் யானையானது அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதியில் உலா வரும் நிலையில், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்குள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மேலும் காட்டு யானை மிதித்து ஆறுமுகச்சாமி (53) என்ற நபர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு யானையை விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது யானையை விரட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து யானை மிதித்து படுகாயம் அடைந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகச்சாமி (53) என்ற நபரை நேரில் சென்று ஆறுதல் கூறி மருத்துவா்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணிவரை வனப்பகுதிக்கு செல்லாமல் போக்கு காட்டிய யானையை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அங்கிருந்து வனப்பகுதிக்கு விரட்டினார்கள். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட மின்சாரம் வழங்கப்பட்டது.
24 மணி நேரமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், வனத்துறை , வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளின் நிம்மதியை கெடுத்த காட்டு யானை நேற்று இரவு 7 மணிக்கு வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது . இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.