நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
1 min read
A low pressure area will develop tomorrow
28.8.2024
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கரையோரம் அதற்கு அடுத்த 2 நாள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாளை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.