தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை- பொதுமக்கள் பீதி
1 min read
A leopard entered the town near Tenkasi – public panic
1.9.2024
தென்காசி அருகே மேக்கரை, வடகரை பகுதிகளில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தொழுவத்தில் கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மேக்கரை, பண்பொழி, வடகரை பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வரும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இந்நிலையில் வடகரை, ரகுமானியாபுரம் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள குறவன் பாறை பகுதியில் காஜாமைதீன், அப்துல் காதர், ஆகியோருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த பசுமாட்டை கடித்துக் கொன்றது. மேலும் ஒரு பசுமாட்டை கடித்துவிட்டு, வனப்பகுதிக்கு தப்பிச் சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கடையநல்லூர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பசுமாட்டை கடித்துக்கொன்று விட்டு வனப்பகுதிக்கு சென்ற சிறுத்தை நேற்று முன் தினம் இரவில் மீண்டும் கடையநல்லூர் அடவிநயினார் பகுதியில் புகுந்தது அந்த பகுதியைச் சேர்ந்த மணி (வயது 52) என்பவருக்கு சொந்தமான மாட்டை கடித்துக் கொன்றது.
இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதன் மூலம் மாட்டை அடித்து கொன்றது சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த சிறுத்தை மனிதர்கள் நடமாடும் பகுதியில் அடிக்கடி உலா வருகிறது. தற்போது மீண்டும் ஊருக்குள் புகுத்து மாட்டை கடித்துக்கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் வெளியே வரவே அச்சமாக உள்ளது பொதுமக்கள் யாருக்கும் ஏதேனும் ஆபத்துவரும் முன் வளத்துறையினர் விரைந்து செயல்பட்டு சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வளப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என்று தெரிவித்தனர்.