அமெரிக்கவில் பட்டுவேட்டியில் மு.க.ஸ்டாலின்- நெகிழ்ச்சி பேச்சு
1 min read
M. K. Stalin’s resilience speech among American Tamils
8.9.2024
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரமாண்டமாக நடந்த தமிழர் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது. சிறப்பான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ததற்கு நன்றி. அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறப்புகள். நம் எல்லோருக்கும் பாசத்தை ஊட்டிய தாய் தமிழ்த்தாய் தான். தமிழை தமிழே என்று அழைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழகத்தின் முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன்’ என பதிவிட்டுள்ளார்.