பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி ஒதுக்கீடுகாங்கிரசுக்கு 4; தி.மு.க.,வுக்கு 1
1 min read
Parliamentary Standing Committee Chairman Post Allotment- 4 for Congress; 1 for DMK
10.9.2024
பாராளுமன்ற மக்களவை முக்கிய எதிர்க்கட்சி இடத்தை பிடித்த காங்கிரசிற்கு, பாராளுமன்ற 4 குழுக்களில் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.
பாராளுமன்ற பொது கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, எஸ்.டி.,எஸ்.சி. மற்றும் பழங்குடியினருக்கான நலக்குழு, பிற்படுத்தப்பட்டோருக்கான நலக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் உள்ளன.
இக்குழுவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் உறுப்பினர்களாகவும், ஒரு தலைவரும் நியமிக்கப்படுவர். காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு லோக்சபாவில் பலம் அதிகரித்துள்ளது. தற்போது லோக்சபாவில் முக்கிய எதிர்க்கட்சி இடத்தை பிடித்த காங்கிரசிற்கு, பார்லிமென்டில் 4 குழுக்களில் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.
ஆனால் ஆறு குழுக்களில் தலைவர் பதவி வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதம் பிடிக்கிறது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தலா ஒரு குழு தலைவராக தி.மு.க.வும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு குழுவின் தலைவர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ராஜ்யசபாவில் கீழ் வரும் உள்துறைக்கான நிலைக்குழுவின் தலைவராக காங்கிரசுக்கு கிடைக்காமல் போகலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முக்கியமான பொது கணக்கு குழுவின் தலைவராக கே.சி.வேணுகோபால் உள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:-
முக்கிய எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளுக்கு அவர்களின் எம்.பிக்கள் எண்ணிக்கை அடிப்படையில் நாங்கள் சீட் வழங்குகிறோம். சில குழுக்களின் தலைவர் பதவியை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு கொடுக்க உள்ளோம்.
நாங்கள் காங்கிரசுடனும், மற்றவர்களுடனும் விவாதித்தோம். விரைவில் குழுக்கள் அமைக்கப்படும் என்று நம்புகிறேன். ஆனால் எம்.பி.,க்கள் அதை பிரச்னையாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். செப்டம்பர் மாதத்திற்குள் அமைக்காவிட்டால் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரம் வரை குழு அமைக்காவிட்டால் அதை கேட்க, எம்.பி.,க்களுக்கு உரிமை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.