நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
1 min read
PM Modi talks with Ukrainian President Zelensky in New York
24/9/2024-
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 22-ந்தேதி சென்றார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார்.
பின்னர் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். மேலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் நியூயார்க் சென்றடைந்த மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். மசாசு செட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்பாடு செய்த வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையில் நடந்த எதிர்க்கால உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிற நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது உக்ரைன்-ரஷியா இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் மோடிக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, “நியூயார்க்கில் உக்ரைன் அதிபரை சந்தித்தேன். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைனுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைனில் உள்ள மோதலை விரைவில் தீர்க்கவும், அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை மீட்டெடுக்கவும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் தெரிவித்தேன் என்றார்.
இந்த சந்திப்பு குறித்து ஜெலென்ஸ்கி கூறும்போது, எங்கள் உறவுகளை தீவிரமாக வளர்த்து வருகிறோம். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்கிறோம்.
எங்கள் பேச்சுவார்த்தையின் முக்கிய கவனம் சர்வதேச தளங்களில், குறிப்பாக ஐ.நா மற்றும் ஜி 20-ல் எங்கள் தொடர்புகளை மேம்படுத்துவது, அத்துடன் அமைதியை செயல்படுத்துவது ஆகும் என்றார்.
கடந்த 3 மாதங்களில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது 3-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார்.