குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பக்தர்களின் பேருந்து- பத்திரமாக மீட்பு
1 min read
Bus of Tamilnadu devotees caught in Gujarat flood- safely rescued
27/9/2024
குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்த 55 பக்தர்கள் சென்ற சொகுசு பேருந்து, கோலியாக் கிராமத்தில் உள்ள தரைபாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கியது. இது குறித்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக பக்தர்கள் கோலியாக் கிராமத்தில் அருகில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோவிலுக்கு சென்று விட்டு பாவ்நகரை நோக்கி திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாவ்நகர் பேரிடர் மேலாண்மைப் பிரிவு துணை மாமலதார் சதீஷ் ஜம்புச்சா தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்நகர் பேரிடர் மீட்பு படையினர் தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பேருந்தில் இருந்து தமிழக பக்தர்களை டிரக் மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். டிரக் மூலம் பேருந்தின் அருகே சென்று, கண்ணாடியை உடைத்து பயணிகள் அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.