வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பற்றி தென்காசி ஆட்சியர் ஆய்வு
1 min read
Study of South East Monsoon development on Northeast Monsoon
1.10.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு பொதுப்பணித்துறை யினர் அரசு கட்டிடங்கள், சாலையோரங்களில் உள்ள மரம். மின் கம்பி ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதுபார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் அன்றாடப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் தேவையான மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இறப்புகள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து நிவாரண உதவி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆறு, குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து கண்காணித்திடவும். குளங்களின் கரை பகுதிகள் வலுவாக இருப்பதை உறுதிபடுத்திட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பயிற்சி வழங்கிட வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கழிவு நீர், மழை நீர் தேங்காமல் கழிவு நீர் கால்வாய்களை முறையாக பராமரிக்க வேண்டும். மழை காலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடி தண்ணீரில் குளோரின் கலந்த குடி தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து வருவாய் வட்டாட்சியர்களுக்கும் TN Smart App பயிற்சி வழங்கிட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் வருகின்ற வடகிழக்கு பருவ மழையினை உரிய முன்னேற்பாடுகளுடன் எதிர்கொண்டு இயற்கை இன்னல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை விபரங்கள் மற்றும் துறை வாரியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அனைத்து துறை முதல்நிலை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.