மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு 63 ஆயிரம் கோடியா? தமிழ்நாடு அரசு விளக்கம்
1 min read
63 thousand crore central government share for metro rail project? Tamil Nadu Government Explanation
4/1-0/2024
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிக்கான மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எழுதிய கடிதத்தில், “சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பு வழங்க வேண்டும்” என்று கோரினார்.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைஅமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2027-ம் ஆண்டில் நிறைவடையும்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழக அரசின் பங்கு ரூ.22,228 கோடி, கடன் ரூ.33,593 கோடி பங்கிடப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.