சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்- கம்யூ. தலைவர்கள் கைது
1 min read
Protest in support of Samsung workers-Comm. Leaders arrested
5.10.2024
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.