June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னை புறநகர் ரெயில்களில் நேற்று மட்டும் 3 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ ரெயிலில் 4 லட்சம் பேர்

1 min read

3 lakh people traveled on Chennai suburban trains yesterday alone: ​​4 lakh people traveled on metro rail

7.10.2024
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்த பயணிகளை திறம்பட கையாள, சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் மற்றும் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு யு.டி.எஸ். செயலி மற்றும் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தி, அடிக்கடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் நாள்தோறும் சுமார் 55 ஆயிரம் பேர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதனால், பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சிறப்பு ரெயில் இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தேவையான வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை நேற்று மக்களுக்கு மிகுந்த கை கொடுத்தது. 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்பட்டதால் கூட்டத்தை சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., சென்ட்ரல், எழும்பூர் போன்ற மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 1.70 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ததாக சென்னை மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த செப்டம்பர் 6-ந்தேதி ஒரே நாளில் 3.73 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த நிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.