அரியானா தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்: ராகுல் காந்தி
1 min read
We are studying Ariana election results: Rahul Gandhi
9.10.2024
நடந்து முடிந்த 2 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காஷ்மீரை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. அரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
அரியானாவில் பாஜகவின் நயாப் சிங் சைனி மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா புதிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இருமாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
அரியானா தேர்தலில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன். ஆதரவு அளித்த அரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணிக்கு வெற்றியளித்த அம்மாநில மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றி. ஜனநாயக சுயமரியாதைக்கும், அரசியல் சாசனத்திற்கும் கிடைத்த வெற்றி இது. உரிமைகள், பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். மக்களின் குரலுக்கு எப்போதும் ஆதரவாக நிற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.