டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
1 min read
Man who made bomb threat to Delhi airport arrested
27.10.2024
இந்தியாவில் கடந்த சில நாட்களாக உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன கடந்த 12 நட்களில் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டலை தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. சமூகவலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறன.
இதனிடையே, டெல்லி விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சமூகவலைதளம் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலையடுத்து விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நபரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். டெல்லியின் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த ஷியாம் உபத்யா (வயது 25) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கும் நிலையில் தனது பெயர் தேசிய அளவில் கவனம் பெற வேண்டும் என எண்ணி டெல்லி விமான நிலையத்திற்கு உபத்யா வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் உபத்யாவை சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.