சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
1 min read
Bomb threat to Chennai airport
30.10.2024
இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களில் 300க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. சமூகவலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய கழிவறையில் திரவ வடிவிலான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மர்ம இமெயில் வந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.