ஆலங்குளம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் கைது
1 min read
Husband arrested for killing his wife near Alankulam
6.11.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க முயன்ற மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கருவந்தா உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவருக்கும், கீழசுரண்டையை சேர்ந்த சிவனம்மாள் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படவே ஆத்திரம் அடைந்த சுரேஷ் அரிவாளால் சிவனம்மாளை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார்.
இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சுரேஷ் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் தினமும் சண்டையிட்டுவந்ததால் அவரை நெல்லையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டார். நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி 2 பேரும் அந்த மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தைகள் வெளியில் விளையாட சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இருந்த சிவனம்மாளை அரிவாளால் சுரேஷ் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சிவனம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சுரேசை போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் கூறியதாவது:-
நான் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்தது பிடிக்காமல் எனது மனைவி என்னிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தேன். ஆனாலும் என்னால் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை. இனால் எனது மனைவி என்னை அடிக்கடி திட்டிக் கொண்டே இருந்தார். என்னை குணமாக்குவதாக கூறி மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் அடிக்கடி அழைத்து சென்றார். இது எனக்கு பிடிக்கவில்லை.
சம்பவத்தன்று மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து என்னை திட்டினார். இதனால் ஆத்திரத்தில் அவரை வெட்டிக் கொன்றேன்.
அதேநேரம் மனைவியை கொலை செய்து விட்டோமே என்று வருந்திய நான் மெயின் ரோட்டிற்கு அரிவாளுடன் ஓடினேன். அப்போது அங்கு வந்த பேருந்தில் விழுந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அது நடக்கவில்லை. தொடர்ந்து அங்குள்ள காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து எனது லுங்கியில் பெரியகல்லை கட்டிக்கொண்டு விழுந்தேன். ஆனால் அதிலும் தப்பித்து விட்டேன். கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த என்னை போலீசார் பிடித்துவந்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.