எலான் மஸ்க்கின் சொத்து ரூ.29 லட்சம் கோடியை தாண்டியது
1 min read
Elon Musk’s wealth exceeds Rs 29 lakh crore
24.11.2024
டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு இன்னும் உயர்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த எலான் மஸ்க், டிரம்பின் பிரசாரத்துக்கு பல ஆயிரம் கோடி நிதியையும் வழங்கினார்.
இதன் மூலம் அவர் டிரம்புக்கு மிகவும் நெருக்கமான நபராக மாறினார். தேர்தலில் வெற்றிப் பெற்ற டிரம்ப் தனது தலைமையில் அமைய இருக்கும் புதிய அரசில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். இதன் காரணமாக எலான் மஸ்கின் நிறுவனங்களின் பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. இதனால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தேர்தலுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு 29 லட்சம் கோடியை கடந்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக வரலாற்றிலேயே பெரும் பணக்காரர் என்கிற பெருமையை பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.