மழை பாதிப்பு: தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி
1 min read
Rain damage: Thaweka leader Vijay provides relief assistance
3/12/2024
வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் மிதமான காற்றுடன் மழை பெய்தது. காலை நேரத்தில் விட்டு விட்டு பெய்த மழை, பின்னர் வெளுத்து வாங்கியது. சில மணிநேரம் இடைவிடாமல் கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சில இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். சுரங்கப்பாதைகள் மழைநீரால் நிரம்பி, நீச்சல் குளம் போன்று மாறின. இதனால் சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. அந்த சமயத்தில் சாலையில் தேங்கிய தண்ணீர் வேகமாக வடிய தொடங்கின. ஒருசில இடங்களில் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. மழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் பெஞ்சல் புயல் மற்றம் கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களை தவெக தலைமை அலுவலகமான பனையூருக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்காதது ஏன் ? என நிவாரணம் பெற்றவர்களிடம் விஜய் விளக்கமளித்துள்ளார்.
உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நிவாரணம் பெற்றவர்களிடம் விஜய் தெரிவித்துள்ளார்.