அரசு பள்ளிகளை தாரை வார்ப்பா? மார்க்சிஸ்ட் கட்சிக்கு அமைச்சர் மகேஷ் கண்டனம்
1 min read
Minister Mahesh condemns the Marxist Party
2.1.2025
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், அரசு பள்ளிகள் தனியாருக்கு தரப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம் பெற்றுள்ளது. அதன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 500 பள்ளிகளை தத்து கொடுக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியே, இப்படி அறிக்கை வெளியிட்டது தி.மு.க.,வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது:-
அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா? தவறாக புரிந்து கொண்டு தாரை வார்ப்பு என விமர்சனங்கள் செய்கின்றனர். அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன். அரசு பள்ளி விவகாரத்தில் எனது தரப்பு விளக்கங்களை கேட்காமல் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளை அதை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை. 500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது. சி.எஸ்.ஆர்., நிதி மூலம் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன் வந்தன. அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
மத்திய அரசு நிதி கொடுக்காமல் கழுத்தை நெரிக்கிறது. மிரட்டல் விடுக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொணடால் தான் நிதி தருவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள். எங்கள் கொள்கைகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி விடுங்கள். எங்கள் பிள்ளைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி பெயரையோ, தலைவரின் பெயரையோ குறிப்பிடாமல் அமைச்சர் கண்டனம் தெரிவித்தாலும், அவர் குறிப்பிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படி ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரு கட்சிகள், இப்படி மாறி மாறி கண்டனம் தெரிவித்துக் கொள்வது, இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.