June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

விவசாயிகள் போராட்டம்-மதுரை ஸ்தம்பித்தது

1 min read

Farmers’ protest-Madurai stalled

7.1.2025
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசிடமிருந்து வேதாந்தா குழும நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
மாநில அரசு டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் மத்திய அரசு ஏலத்தை ரத்து செய்யக் கோரியும், அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தலத்தை பாதுகாக்கவும், மேலூர் வட்டாரத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரியும், மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மேலூர் முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, இன்று மதுரை தலைமை தபால் நிலையம் முன் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மேலூர் பகுதியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலூரை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் பேரணியாக கிளம்பி நரசிங்கம்பட்டியில் கூடியிருந்த விவசாயிகளோடு சேர்ந்து மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபயணத்தை மேற்கொண்டனர்
ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும், 20 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து வந்தனர். இதனால்போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதே போன்று பல்வேறு பகுதிகளிலிருத்தும் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள், சிறிய வாகனங்களிலும் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
இதனால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடைபயணமாக வர அனுமதி மறுத்த காவல்துறையினர் வெள்ளரிபட்டி மற்றும் சிட்டம்பட்டி, ஒத்தகக்கடை பகுதிகளில் தடுக்க முற்பட்டபோது காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின் பேரணி தொடங்கியது. பேரணியில் வந்த விவசாயிகளுக்கு போராட்ட குழுவினருக்கு ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் பாட்டில்களையும், உணவுகளையும் வழங்கி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்
இதற்கிடையே மாட்டுத்தாவணியிலிருந்து தமுக்கம் தலைமை தபால் நிலையம் வரை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. மதுரை மாநகர எல்லைக்குள் மதிய நேரத்தில் சாரை சாரையாக மக்கள் அணிவகுத்து வர அவர்களுடன் நூற்றுக்கணக்கான வாகனங்களும் பின் தொடர்ந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்பு தமுக்கம் வந்து சேர்ந்தனர். அங்கு காவல்துறை வைத்திருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து போராட்ட குழுவினர் தமுக்கம் பகுதிக்கு வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். போராட்டத்தை முடிக்க மூன்று முறை காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு போராட்டத்தை முடித்து கலைந்து சென்றனர்.
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் போல மதுரையை இன்று விவசாயிகள் ஸ்தம்பிக்க வைத்தனர்.
மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றால், அடுத்த போராட்டம் இதை விடத் தீவிரமாக இருக்கும் என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.