July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆ.ராசாவுக்கு முத்தரசன் கடும் கண்டனம்

1 min read

Mutharasan strongly condemns A.Raza

8.1.2 025
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று (07.01.2025) நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்.
கடந்த 1989-90ம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ந்ததும், இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகளாகும். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இதர கம்யூனிஸ்ட் கட்சிகளும் விரிவான ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளன. இவைகளை ஆ.ராசா சார்பு நிலை தவிர்த்து கற்றறிந்து பேச வேண்டும்.
“கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே செத்துவிட்டது”, “முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை” என்று தத்துவ எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், கலைஞர் “சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே” என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகளின் நேர்மையை, எளிமையை, தன்னல மறுப்பை, பொதுநல வேட்கையை, போராட்ட குணத்தை வர்க்க எதிரிகளும் ஒப்புக் கொள்வதை நாடறியும் என்பதை ஆ.ராசாவும் அறிந்திருக்க வேண்டும். போகிற போக்கில் “கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த கம்யூனிஸ்ட் சுயநலவாதிகள் பட்டியலை வெளியிட வேண்டும். கம்யூனிசம் என்பது வறட்டு தத்துவம் அல்ல, அது மனித குலம் நிறைவாக, நீடித்த அமைதியும், நிரந்தர சமாதானமும் நிலவும் முற்றிலும் புதுமையான சமூக அமைப்பில் வாழும் வாழ்க்கை முறை பற்றிய சமூக விஞ்ஞானம்.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான் மனிதகுல வரலாறாகும். இதில் இயற்கை நிலை சமூகம் படிப்படியாக மாறி இன்று நிதி மூலதனமும், குழும நிறுவனங்களுமாக ஆதிக்கம் செலுத்தும் உச்சபட்ச ஏகாதிபத்திய சமுக அமைப்பாக வளர்ந்து, மீள முடியாத நெருக்கடியில் சிக்கி, சாவில் இருந்து தப்பித்துக் கொள்ள துடிக்கும் நோயாளியாக தவித்து வருகிறது. சமூக நோயை குணப்படுத்தும் கம்யூனிசம் வெல்லும் எனும் காட்சியை ஆ.ராசாவும் காணும் காலம் வரும்.

உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பட்டியலின சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்டுகள் மீது, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் குற்றம் சாட்டுவது பொறுப்பற்ற செயலாகும். இதில் தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். “யாகாவாராயினும் நாகாக்க”…

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.