பொங்கலுக்கு ரூ.1,000 வழங்காதது ஏன்? – அமைச்சர் விளக்கம்
1 min read
Why was Rs. 1,000 not given for Pongal? – Minister explains in the Assembly
9.1.2025
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.1,000 பணம் கொடுக்கப்படும் என மக்கள் எதிர்ப்பார்த்து வந்தனர்.
இந்த சூழலில், இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்காததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;
“பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயல், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே கிடைத்தது. பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை. இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 வழங்க முடியவில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.