தங்க சுரங்கத்தில் சிக்கி 78 ஆப்ரிக்கர்கள் பலி
1 min read
78 Africans die in gold mine collapse
16.1.2025
தென்னாப்ரிக்காவில் சட்டவிரோத சுரங்கம் தோண்டியதுடுன் அரசுடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதமாக சுரங்கத்தில் சிக்கி தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களை சரணடைய போலீசார் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் சரணடைய மறுத்து அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் தங்க சுரங்கத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். இவ்வாறு கடந்த இரண்டு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தப்பட்டன.
அதை தொடர்ந்து 2 கி.மீ., ஆழ சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் வெளியேற உதவும் கயிறு மற்றும் கம்பிகளை அகற்றியது. இதனால் உணவின்றியும், நீரின்றியும் கடந்த இரு மாதமாக தவித்த 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 160 பேர் மேலே வரமுடியாமல் தவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும் சில தொழிலாளர்கள் வரமறுத்து சுரங்கத்திலேயே தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் பிரதி நிதி குழு ஒன்று அரசை குற்றம்சாட்டியுள்ளது. அரசு ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புப்பணியை மேற்கொள்ள மறுத்ததே சுரங்க தொழிலாளர்கள் இறப்புக்கும் உடலில் நீரிழப்புக்கும் காரணம் என தெரிவித்துள்ளனர்.