சயிப் அலிகான் மீது தாக்குதல்- நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
1 min read
Attack on Saif Ali Khan – Doctors say he is fine
16.1.2025
பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வந்தனர். தற்போது மர்மநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சயிப் அலிகானுக்கு ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. ஒரு காயம் அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது என்று லீலாவதி மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி கூறியிருந்தார்.
இந்நிலையில், சயிப் அலிகான் தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாகவும், நலமாக இருப்பதாகவும் லீலாவதி மருத்துவமனை டாக்டர் நிதின் டாங்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்பட்ட சயிப் அலிகான் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுகுத்தண்டில் கத்திக்குத்து ஏற்பட்டதால் அவருக்கு மார்பு முதுகுத்தண்டில் பெரும் காயம் ஏற்பட்டது. கத்தியை அகற்றி, கசிந்த முதுகெலும்பு திரவத்தை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இடது கையில் இரண்டு ஆழமான காயங்களும், கழுத்தில் ஒரு ஆழமான காயமும் பிளாஸ்டிக் சர்ஜரி குழுவால் சரிசெய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.