எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: சிலைக்கு மரியாதை
1 min read
MGR’s 108th birth anniversary: Tribute to the statue
17.1.2025
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து 108 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கழக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார்.