லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக் கொலை
1 min read
Senior Hezbollah commander shot dead in Lebanon
23.1.2025
ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து ஏதென்ஸ் நோக்கிச் சென்ற விமானத்தை கடத்தி, அதில் ஒரு அமெரிக்கரை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த ஷேக் ஹமாதி, தனது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியது.
குடும்ப பிரச்சனையால் இந்தக் கொலை நடந்துள்ளது என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.