அணுகுண்டை விட 500 மடங்கு அதிக ஆற்றல் சிறுகோள் பூமியை தாக்கும்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
1 min read
Asteroid with 500 times more energy than a nuclear bomb could hit Earth – Scientists warn
30.1.2025
2024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் [asteroid] 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்
Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) விஞ்ஞானிகள், 2024 டிசம்பர் 27 அன்று பூமியிலிருந்து சுமார் 8,29,000 கி.மீ தொலைவிலிருந்து இந்த சிறுகோள் பூமியை நோக்கி வருவதாகக் கண்டறிந்தனர். இந்த சிறுகோள் தற்போது பூமியிலிருந்து 27 மில்லியன் மைல்கள் தொலைவில் சூரிய குடும்பத்தைச் சுற்றி நகர்ந்துகொண்டிருக்கிறது.
சுமார் 196 அடி விட்டம் கொண்ட இந்த 2024 YR4 சிறுக்கொள் 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்க 1.2சதவீதம் [1-in-83] வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டில் இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
2024 YR4 சிறுகோள் பூமியைத் தாக்கினால் பூமியின் மீது சுமார் 8 மெகா டன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது. 8 மெகா டன் ஆற்றல் என்பது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஆற்றலை விட 500 மடங்கு அதிகமாகும்.
விண்வெளியில் வைத்து சிறுகோள் மீது மோதலை ஏற்படுத்தி அதன் பாதையை நகர்த்த விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர். 2024 YR4 சிறுகோளை கவனமாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள் 2032 இல் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறுகோள் என்பது சூரியனைச் சுற்றி வரும் ஒரு சிறிய, பாறைப் பொருளாகும். சிறிய கூழாங்கல் சைஸ் முதல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் விட்டம் வரை இந்த சிறுகோள்கள் காணப்படுகின்றன.
சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பக்கால சூரிய மண்டல உருவாக்கத்தின் எச்சங்களே இந்த சிறுகோள்கள். பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள பெல்ட்டில் இவை காணப்படுகின்றன.