நித்யானந்தா ஈக்வடாரில் உள்ளார்- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
1 min read
Nithyananda is in Ecuador – Tamil Nadu government informs High Court
1/2/2025
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமைறைவாக உள்ளார். அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக பேசி வருகிறார்.
எனினும் , கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், வழக்கு ஒன்றில் நித்யானந்தா குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், நித்யானந்தா எங்கு உள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளது.
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ‘நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார்,’ என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட கோர்ட்டு, இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது. முன்னதாக, நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சினையாக இருக்கிறது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது.