நெல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: உற்சாக வரவேற்பு
1 min read
Chief Minister M.K. Stalin’s field inspection in Nellai: Enthusiastic reception
6.2.2025
பல்வேறு மாவட்டங்களில் களஆய்வுப் பயணம் மேற்கொண்டு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று நெல்லை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கே.டி.சி. நகர் பகுதியில் நடந்து சென்று மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
இதனைத்தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைத்தார்.
இதனையடுத்து நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
அங்கு வைத்து காணொலி காட்சி வாயிலாக, நெல்லை டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள். இரவில் நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.