அஞ்சல் துறை மூலம் உள்நாடு, வெளிநாடுகள் பார்சல் சேவை-கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
1 min read
Domestic and International Parcel Service through the Postal Department – Divisional Superintendent Information
9.2.2025
இந்திய அஞ்சல் துறை பொதுமக்களின் நலன் கருதி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் சேவையை வழங்கி வருகிறது.
இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் குறைந்த செலவில் பாதுகாப்பான முறையில் தங்களது பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்ப பார்சல் சேவையை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது.
பொதுமக்களது பொருட்களை அஞ்சலகத்தில் வைத்தே பார்சல் பேக்கிங் செய்து கொடுக்கும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் பாதுகாப்பான முறையில் தங்களது பொருட்களை, தயாரிப்புகளை அனுப்ப முடிகிறது.
மின்னணு பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள், கைவினை நயாரிப்புகள். உணவுப்பொருட்கள் ஆகியவற்றை சில்லறையாகவும் மொத்தமாகவும் பார்சல் சேவையின் மூலம் அனுப்பலாம். பார்சல் அனுப்பியது முதல் டெலிவரி ஆவதுவரை அதன் ஒவ்வொரு நிலையையும் இணையத்தில் டிராக் செய்யும் வசதியும் உள்ளது. டெலிவரி ஆனவுடன் அனுப்பியவருக்கும். முகவரிதாரருக்கும் டெலிவரி செய்யப்பட்டது குறித்து குறுந்தகவல் அனுப்பபடுகிறது. அதிகப்படியான பார்சல்களை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்படத்தக்க தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் இந்த பார்சல் சேவையை வரிசையில் நிற்காமல் எளிமையாக பெறும் பொருட்டு கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் பார்சல் பேக்கேஜிங் மையம் தனியே அமைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகங்களில் வழங்கப்படும் பார்சல் சேவையை வழங்கும் ஒரு சிறப்பு முகாம் இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெறுகிறது. பொதுமக்கள், வியாபாரிகள் தங்களது பொருட்களை அனுப்ப பார்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த சேவை குறித்த மேலும் விபரங்களுக்கு 04632 221013 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.