எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் செங்கோட்டையன் புறக்கணிப்பு- கோகுல இந்திராவும் அதிருப்தி
1 min read
Sengottaiyan boycotts Edappadi Palaniswami meeting – Gokula Indira is also unhappy
10.2.2025
எடப்பாடி பழனிசாமியை பாராட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து இன்று காலை அவர் விளக்கம் அளித்தார். அப்போது செங்கோட்டையன் கூறும்போது, திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் தான் நிறைவுபெற்றது. எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா. விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.
அரசியல் கலப்பு இருக்க கூடாது என்பதற்காகவே தலைவர்களின் படங்கள் வைக்கப்படவில்லை. பாராட்டு விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. கோகுல இந்திரா பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்றார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்று கோகுல இந்தரா பேசியிருந்தார்.
சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-
அதிமுகவில் ஒற்றுமை இல்லை. எனக்காக இல்லை… என் செல்வாக்குக்காக இல்லை… பொதுச்செயலாளர் அறிவித்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக… அதுதான் நோக்கமே தவிர… எல்லாரையும் தான் கூப்பிட்டோம். அதனால என்னை பார்த்து பேசுறதுக்கோ, என்னை பார்த்து கும்பிடறதுக்கோ, என்னை பார்த்து பயப்படறதுக்கோ… யாருக்கும் அச்சம் வேண்டாம். யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம். என்ன ஒண்ணு நானும் தம்பியும் தானே சுத்துக்கிட்டு இருக்கோம். எங்களோட போட்டோவ போஸ்டரில் போட்டா சந்தோஷம் இருக்காதா… மகிழ்ச்சி இருக்காதா…
எப்படி உங்களால என்னை மறக்க முடிகின்றது… என்ன நிர்பந்தம்… எந்த சுயநலம் என்பதை கேட்கிறேன். இருப்பினும் தொகுதியில் யார் நின்றாலும் அ.தி.மு.க. இங்கு வெற்றி பெறுவதற்கு நான் நிச்சயமாக உறுதியாக பணியாற்றுவேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. தேர்தல் நேரத்தில் இந்த ஒரு குருப்பிஷமும் இந்த விஷயமும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதை தெரிவிக்கிறேன்.
முன்னாள் அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்பதை அறிந்தும், மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார்.