தென்காசி அருகே தந்தையை எரித்து கொலை செய்த மகன் கைது
1 min read
Son arrested for burning father to death near Tenkasi
14.2.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் அகதிகள் முகாமிற்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் கடையநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் க.ஆடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் துறை அலுவலர் ஆனந்தியும் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டவர் கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த சிவராஜ் (வயது54) என்பதும், கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் ,சிவராஜூக்கும், அவரது மகன் கௌரி ராஜ் (35) இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் சிவராஜை கோழிப்பண்ணை உரிமையாளர் அழைப்பதாக கூறி கௌரிராஜ் பைக்கில் அழைத்துச் சென்றாராம். பின்னர் பாட்டிலால் சிவராஜை கொலை செய்து , பெட்ரோல் ஊற்றி எரித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் கௌரிராஜை கைது செய்தனர்.
இந்நிலையில் சிவராஜின் முதல் மனைவி அல்லிராணி சிவராஜை பிரிந்து இலங்கையில் வசித்து வருவதாகவும், இரண்டாவது மனைவி முத்துச்சாமியாபுரம் மாரியம்மாள் உடன் அவர் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது . கொலை செய்த கௌரிராஜுக்கு மனைவி சைலாஜினி மற்றும் இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது
தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முயற்சியினால் எரிந்து சாம்பலான நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகளை 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல்துறைக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.