உ.பி.யில் முஸ்லிம்கள் சம்மதத்துடன் இடிக்கப்பட்ட பழமையான மசூதி
1 min read
Old mosque demolished with Muslim consent in UP
22.2.2025
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் 1857 இல் கட்டப்பட்ட 168 ஆண்டுகள் பழமையான மசூதி இடிக்கப்பட்டது.
ஜகதீஷ் மண்டப் பகுதி அருகே டெல்லி சாலையில் அமைந்துள்ள இந்த பழமையான மசூதி, முஸ்லிம் சமூகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒப்புதலின் பேரில் இடிக்கப்பட்டது.
அப்பகுதியில் மெட்ரோ ரெயில்தடம் அமைக்கும் பணிகளுக்கு அந்த மசூதி தடையாக இருந்த நிலையில் அதை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் சம எண்ணிக்கையில் வாழும் அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்படும் என அஞ்சி மசூதியை இடிக்க அதிகாரிகள் தயங்கினர்.
இதனால் கடந்த வியாழக்கிழமை அப்பகுதி முஸ்லிம்களுடன் மீரட் நகர உதவி ஆட்சியர் பிரிஜேஷ் சிங், நகர காவல்துறை எஸ்.பி. ஆயுஷ் விக்ரம்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த மறுப்பும் கூறாமல் முஸ்லிம்கள் மசூதியை இடிக்க சம்மதித்தனர்.
மேலும் மசூதியை தங்கள் செலவிலேயே இடிப்பதாவதும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த மசூதியில் வெள்ளிக்கிழமை முதல் தொழுகை நிறுத்தப்பட்டது. மசூதிக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மசூதி இடிக்கப்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதில் என்றுமே முஸ்லிம்கள் முதலாவதாக நிற்பவர்கள் என்றும் புதிய மசூதி கட்ட அப்பகுதியில் வேறு இடத்தில் அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் மசூதியின் முத்தவல்லி, ஹாஜி ஷாஹீன் தெரிவித்தார்.