டெல்லி சட்டசபை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு
1 min read
Atishi elected as Leader of Opposition in Delhi Assembly
23.2.2025
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 8-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து ரேகா குப்தா என்ற பெண் எம்.எல்.ஏ.வை முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ரேகா குப்தா டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிஷியை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இதன் மூலம் டெல்லி சட்டசபையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார்.
இதேபோன்று, ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். இந்நிலையில், சட்டசபைக்கு புதிதாக சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அவர், ரோகிணி சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் அதிஷி ஆகியோர் அவரை அழைத்து கொண்டு சென்று நாற்காலியில் அமர வைத்தனர்.
சட்டசபையின் 8-வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட விஜேந்தருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறும்போது, உங்களுடைய வழிகாட்டுதலின் கீழ் இந்த சட்டசபையானது, நல்ல முறையில் நடைபெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என கூறினார்.
எதிர்க்கட்சி தலைவராக, நீங்கள் பல்வேறு விவகாரங்களை எதிர்கொண்டீர்கள். பலமுறை பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியிருக்கிறீர்கள். கடினம் வாய்ந்த அணுகுமுறையை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், நீங்கள் இந்த அவையை மென்மையாக நடத்துவீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கூறினார்.