குழந்தைகளுக்கு தமிழ் பெயர்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min read
Tamil Nadu has a bilingual policy: Chief Minister M.K. Stalin
23.2.2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் இன்று நடைபெற்ற கொளத்தூர் கிழக்குப் பகுதிச் செயலாளரும், தி.மு.க. ஐ.சி.எப். லேபர் யூனியன் பொதுச் செயலாளருமான முரளிதரன் – லதா தம்பதியரின் மகன் மகேஷ்வர் மற்றும் திவ்யகணபதி ஆகியோரது திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார், அதனை தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது:-
இந்தத் திருமணத்தை பொருத்தவரையில், இதை நம்முடைய வீட்டுத் திருமணமாகக் கருதி இந்த மணவிழா நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன். உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன்.புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” இருந்து மணமக்கள் வாழ்க… வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
அதே நேரத்தில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மணமகன் பெயரை, மணமகள் பெயரை நான் பார்க்கிறபோது, எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்ப் பெயர்களாக இல்லை. இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறபோது, உடனடியாக அதில் நீங்கள் இறங்கிவிட வேண்டாம். பொறுத்து, நிதானமாக – அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பது குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரசாரம்.
அதை நாம் தொடர்ந்து கடைபிடித்த காரணத்தினால்தான், இன்றைக்குத் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது, நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இருமொழிக் கொள்கைதான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லும் ஆற்றல் நாம் பெற்றோம். ஐந்தாயிரம் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் கையெழுத்து போட மாட்டேன் என்று நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.
நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், நீங்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். நிச்சயமாக என்னிடம்தான் கொண்டு வந்து பெயர் சூட்டச் சொல்லுவார்கள். அதுவும் எனக்குத் தெரியும். இங்கு சொன்னார்; எங்கள் வீட்டில் இரண்டாவது திருமண விழாவுக்கு வந்திருக்கிறார் என்று சொன்னார். இரண்டாவது மணவிழா மட்டுமல்ல, உங்கள் பேரன், பேத்தி திருமணத்திற்கும் நான்தான் வந்து வாழ்த்துவேன். அந்த வாழ்த்தோடு, அந்த உணர்வோடு இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்க… வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.