வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா நிதி அளித்த விவகாரம்-மத்திய அரசு விளக்கம்
1 min read
Central government explains US funding to increase voter turnout
24.2.2025
இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு (யு.எஸ்.எய்ட்) ஒதுக்கி இருந்த ரூ.182 கோடி நிதியுதவியை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. ”இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. வேறு யாரையோ ஆட்சியில் அமர்த்த ஜோ பைடன் நிர்வாகம் முயன்றுள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஆளும் பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. ‘வெளிநாட்டு சக்திகளின் கருவியாக ராகுல் காந்தி செயல்படுகிறார்’ என்று பாஜக கடுமையாக விமா்சித்தது. அதே நேரத்தில், ‘இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நிதி அமைச்சாம் வெள்யிட்ட ஆண்டறியில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசுடன் இணைந்து அமெரிக்க அமைப்பு ரூ.6,490 கோடி நிதியுதவியுடன் இந்தியாவில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.825 கோடி நிதியை அந்த அமைப்பு விடுவித்தது. வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காக எந்த நிதியும் பயன்படுத்தப்படவில்லை’
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.