உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு; உமர் அப்துல்லா உள்பட 10 பேரை தேர்வு செய்த பிரதமர் மோடி
1 min read
PM Modi selects 10 people including Omar Abdullah to raise awareness against obesity
24.2.2025
பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பேசியதாவது:-
இன்றைய கால கட்டத்தில் 8- பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம், குழந்தைகளிடம் இந்த பிரச்னை அதிகரித்துள்ளது தான்.
உடல் பருமன், பல வகையான நோய்களை, பிரச்னைகளை உருவாக்குகிறது. உங்களுடைய உணவில் பயன்படுத்தும் எண்ணெயில், 10 சதவீதத்தை குறையுங்கள். அதுபோல, உணவுக்கான எண்ணெய் வாங்கும்போதே, 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும் அதே நேரத்தில், 10 பேரிடமும் இது போன்ற சவாலை முன்வையுங்கள். இதனால், உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட முடியும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், உடல் பருமனுக்கு எதிரான பிரசாரம் செய்யவும், எண்ணெய் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு துறைகளை சேர்ந்த 10 பிரபலங்களை தேர்வு செய்து இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, நடிகர் மாதவன், போஜ்புரி நடிகர் நிராகுவா இந்துஸ்தானி, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நடிகர் மோகன்லால், தொழிலதிபர் நந்தன் நிலேகனி, பாடகி ஸ்ரேயா கோஷல், ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தனர். பிரதமர் மோடி விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவும் கூறியுள்ளார்.