June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம்: கூலித் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

1 min read

Alankulam: 3 people sentenced to life imprisonment in the laborer murder case

26.2.2025
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ்குமார் தீர்ப்பு கூறினார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் சேகர். இவரும் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் செவத்தலிங்கமும் ஒன்றாக கூலி வேலைக்குச் செல்வது வழக்கம். செவத்தலிங்கத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒல்லியான் (எ) லிங்கம் என்பவரது மனைவி பார்வதிக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதற்கு சேகர் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1.8.2015 அன்று இரவு சேகர் ராஜீவ்காந்தி நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒல்லியான் (எ) லிங்கம், அவரது நண்பர்கள் மங்கா(எ) வைத்திலிங்கம், குமார் ஆகியோர் சேகரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கொலை செய்த மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிபதி எஸ்.மனோஜ்குமார் வழக்கை விசாரணை செய்து ஒல்லியான்(எ) லிங்கம் (வயது 42), மங்கா (எ) வைத்திலிங்கம் ( வயது 36) , குமார் (வயது 33) ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜரானார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.