கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
1 min read
An old woman baking bread by hand in boiling ghee
27.2.2025
ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி அன்று கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்து சுவாமிக்கு படைக்கும் விஷேச நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியை சேர்ந்த முத்தம்மாள் (வயது 90) என்ற மூதாட்டி தொடர்ந்து 63-வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். நெய்யால் பக்தர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு மூதாட்டி ஆசி வழங்கினார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் செய்தார். அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.