கேரளாவுக்கு பஸ் மூலம் புகையிலை பொருட்களை கடத்த முயன்றவர் கைது
1 min read
Man arrested for trying to smuggle tobacco products to Kerala by bus
1.3.2025
தென்காசி மாவட்டம்
செங்கோட்டையிலிருந்து கேரளாவிற்கு பஸ் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மேற்பார்வையில் செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் தலைமை காவலர் ராஜா சிங் , அல்மோன்ஸ் ராஜ், வடிவேல், கணேஷ் குமார், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர். செங்கோட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற் கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசிய அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் ஆலங்குளம் அருகே உள்ள கீழ பட்டவராயன் குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்துரை என்பவரது மகன் கலைச்செல்வம் (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பஸ் மூலம் கடத்த முயன்றதும் தெரியவந்தது.
உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்துமூன்று மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு ரூபாய் 60,000 ஆகும்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட செல்வத்தை செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே ஆலங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.