செட்டிகுளம் பெண் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
1 min read
Youth sentenced to life in Chettikulam woman murder case
1.3.2025
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி கல்யாணி (வயது 43) இவரது மகள் இசக்கியம்மாள் என்ற மாலா.
கல்யாணிக்கு துரைப்பாண்டி என்ற மற்றொரு கணவரும் உண்டு. அவர்களுக்கும் இசக்கியம்மாள் என்ற மற்றொரு மகள் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணிக்கும் அவரது இரண்டு கணவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தனது இரண்டு கணவர்களையும் பிரிந்து கல்யாணி தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கல்யாணி வீட்டின் அருகில் அவருடைய அக்காள் இரண்டு பேர் குடியிருந்துக்கிறார்கள்.
இந்நிலையில் சொத்து தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கல்யாணியின் அக்காள் ஈஸ்வரியின் மகள் மங்களம் அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் முருகன் மகன் கருப்பசாமி (வயது 32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனவே கருப்பசாமி தனது மாமியாரான ஈஸ்வரிக்கு ஆதரவாக கல்யாணியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23.04.2019 அன்று மாலையில் கல்யாணிபுரம் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் கல்யாணி தண்ணீர் பிடிக்க சென்றார் அங்கு கருப்பசாமியும் அவரது மனைவி மங்களமும் தண்ணீர் பிடிக்க சென்று உள்ளனர்.
அப்போது தண்ணீர் படிப்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது சண்டையாக மாறி கல்யாணியை கருப்பசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உள்ளார். இதனை தடுக்க முயன்ற மாலாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது பற்றி ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேல் குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 3500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மருதப்பன் ஆஜரானார்.