தென்மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கம் வரை இயக்கம்
1 min read
New procedure to reduce traffic congestion in Tambaram
2.3.2025
தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்ட அனைத்து அரசுபஸ்களும், இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் 04.03.2025 செவ்வாய்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மா.போ. கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பஸ்கள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பஸ்கள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.