வருமான வரி சட்ட திருத்தத்தால் யாரும் வரி ஏய்ப்பு செய்ய முடியாது
1 min read
No one will be able to evade taxes with the amendment to the Income Tax Act
6.3.2025
வருமான வரி சட்டம் 2025-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய திருத்தம் காரணமாக அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒருவர் மீது சந்தேகம் எழும் பட்சத்தில் அவரது தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகளை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வருமான வரித்துறையால் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா காரணமாக அரசாங்கம் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கும் தனிநபர்களின் தனிப்பட்ட, விர்ச்சுவல் டிஜிட்டல் தளமாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் நிதி சார்ந்து இயங்கும் டிஜிட்டல் தளங்களை அரசு அதிகாரிகள் சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய முடியும்.
இதன் மூலம் வருமான வரி சட்டம் 1961-இன் கீழ் கணக்கில் வராத வருமானம், ரொக்கப் பணம், தங்கம், நகைகள் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் அல்லது சொத்துக்களை வைத்திருப்பதாக வருமான வரித்துறை சந்தேகிக்கும் தனிநபர்களின் சமூக வலைத்தள கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல், வங்கி கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டப்படி எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
தற்போது வருமான வரி சட்டம் 1961-இன் 132-வது பிரிவின் படி கணக்கில் வராத வருமானம் அல்லது சொத்துகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தால், சோதனையின் போது கணக்குகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய நடைமுறை சட்டமாக்கப்பட்டால், வருமான வரித்துறையினர் டிஜிட்டல் தரவுகளை கைப்பற்றும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படும். இதில் அவர்கள் கணினி சார்ந்த சாதனங்கள் மற்றும் விர்ச்சுவல் தளங்களை கைப்பற்றி ஆய்வு செய்ய முடியும்.
வருமான வரி சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸ் என்றால் என்ன?
புதிய மசோதாவின் “விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸ்” என்பது- இமெயில் சர்வெர்கள், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள், வங்கி கணக்குகள் அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை சேமிக்க பயன்படுத்தப்படும் வலைதளம் உள்ளிட்டவைகளை குறிக்கும்.
மேலும், கணினி சார்ந்து உருவாக்கப்படும் டிஜிட்டல் தளங்கள்: அதாவது தகவல் பரிமாற்றம், கம்ப்யூட்டர் சிஸ்டம்களை கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகள், கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள், கம்ப்யூட்டர் தரவுகள், தகவல் பரிமாற்ற சாதனங்கள், சைபர்-ஸ்பேஸ், இணையதளம், வொர்ல்டுவைடு வெப் மற்றும் தகவல் மற்றும் விவரங்களை பயன்படுத்தும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவையும் விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸ் ஆக கருத்தில் கொள்ளப்படும்.
இந்த மசோதாவின் படி, அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாக மூத்த வரித்துறை அதிகாரிகள், இணை இயக்குநர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை ஆணையர்கள், இணை அல்லது துணை இயக்குநர்கள், துணை அல்லது பொறுப்பு ஆணையர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் வரி மீட்பு அதிகாரிகளை குறிக்கும்.