கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் கைது-போலீசாருடன் வாக்குவாதம்
1 min read
Tamilisai Soundararajan, who led the signature movement, arrested – argument with police
6.3.2025
மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்குவோம் என மத்திய அரசு சொல்லி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தி திணிப்பை ஏற்க முடியாது என அரசியல் கட்சிகள் கூறி வரும் நிலையில், இந்தி வேண்டாம் என்றால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஃபிரெஞ்சு போன்ற ஏதாவது ஒரு மொழியை எடுத்து படிக்கலாம் என பாஜக கருத்து தெரிவித்து வருகிறது.
கூடுதலாக ஒரு மொழியை அரசுப் பள்ளி மாணவர்கள் கற்பதில் என்ன தவறு என்ன என்றும் பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
சமக்கல்வி இணையதளம், சமக்கல்வி பாடல் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டன.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எம்ஜிஆர் நகரில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினார்.
தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்தியதால் தமிழிசை சவுந்தரராஜனை போலீசார்கைது செய்தனர்.
இன்னொரு நாள் அனுமதியுடன் கையெழுத்து இயக்கத்தை நடத்துங்கள் என போலீசார் தெரிவித்தனர், ஆனால் அதனை ஏற்க மறுத்த தமிழிசை சவுந்தரராஜன், எந்த ஆர்ப்பாட்டமும் போராட்டமும் இல்லாமல் அமைதியாக நடத்தப்படும் போது எதற்காக கைது செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் போலீசாரின் வாகனத்தில் ஏறவும் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்தார். பாமர மக்கள் தாமாக முன்வந்து மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்திடுவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.