June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; 7 மாநில முதல் மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

1 min read

Constituency realignment issue; MK Stalin’s letter to 7 state Chief Ministers

7.3.2025
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக 7 மாநில முதல் மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முன் தினம் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்தில், இப்பிரச்சினை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்வர் மு.க. ஸ்டாலின்,, 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல் மந்திரிகளுக்கும் முன்னாள் முதல் மந்திரிகளுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவில் 1952, 1963 மற்றும் 1973-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. எனினும், 1976-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை

கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடித்ததால், 84வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026 க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதமானதால், தொகுதி மறுவரையறை – முதலில் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டது – எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே நடைபெறக்கூடும் எனத் தற்போது தெரியவருவதாகவும், அதனால் மாநில நலன்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது.

தொகுதி மறுவரையறை நடக்குமா என்பதல்ல கேள்வி, ஆனால் அந்த மறுவரையறை எப்போது நடக்கும், அப்படி நடக்கும்போது, இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா என்பதுதான் கேள்வி.

2026ஆம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும் என்றும், தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகக் குறியீடுகளை அடைந்த மாநிலங்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கும் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையைப் பெற நேரிடும்.

அவ்வாறு அது செயல்படுத்தப்பட்டுவிட்டால், அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இது நமது மாநில மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவதற்கும், மாநிலத்திற்குரிய முக்கிய வளங்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வதற்குமுள்ள திறனைக் குறைத்துவிடும் .

நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல; தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைத்து மாநிலங்களும் 2026-க்குப் பிந்தைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும். மக்கள்தொகை பெருக்கத்தைத்திறம்படக் கட்டுப்படுத்தியதற்காகவும், தேசிய வளர்ச்சி இலக்குகளை நிலைநிறுத்தியதற்காகவும் நம்மைப் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக்கூடாது. இந்தப் பிரச்சினை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று நான் நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக, வரும் 22 ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த முன்மொழிந்து இருக்கிறேன். நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் உங்களின் ஒத்துழைப்பைக் கோருவதாகவும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நமது கூட்டு நன்மைக்காகவும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.